சுலைமான் பென் நோக்கி துப்பிய டேல் ஸ்டைன், அதற்கு தண்டனையாக சம்பளத்தை முழுமையாக இழக்கிறார். இவரது போட்டிக்கான சம்பளத்தின் 100 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது.
பார்படாசில் நடந்த மூன்றாவது டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்க அணி, தொடரை கைப்பற்றியது. இப்போட்டியின் போது இரு அணி வீரர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர். முதலில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரூச் மற்றும் ஜாக்ஸ் காலிஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அம்பயர் சைமன் டாபெல், ஸ்டீவ் டேவிஸ் தலையிட்டு சமாதானம் செய்தனர். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுலைமான் பென் மற்றும் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டைன் முறைத்துக் கொண்டனர். பின் பெவிலியன் திரும்பும் போது, பென் இருக்கும் திசையை நோக்கி துப்பினார் ஸ்டைன். இப்பிரச்னை பற்றி ஐ.சி.சி., "மேட்ச் ரெப்ரி' ஜெப் குரோவ் விசாரணை நடத்தினார். இதில் ஸ்டைன் தவறு உறுதி செய்யப்பட, அபராதம் விதிக்கப்பட்டது.
சுலைமான் பென், தண்டனையில் இருந்து தப்பினார். ரோச்சுக்கு 50 சதவீதம்: இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில்,""விளையாட்டு உணர்வுக்கு எதிராக நடந்து கொண்ட ஸ்டைன், நடத்தை விதிமுறையை(2.2.11) மீறியுள்ளார்.
இவரது போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. நடத்தை விதிமுறையை(2.1.8) மீறிய கேமர் ரோச்சுக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான "மேட்ச் ரெப்ரி' ஜெப் குரோவ் கூறியது: ஸ்டைன் நடந்து கொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவரை, சுலைமான் பென் தூண்டியிருக்கலாம். அதற்கு பதிலடியாக செய்த காரியத்தை மன்னிக்க முடியாது. டெஸ்ட் போட்டிகள், ஒரு வீரரின் ஆட்ட திறன் மற்றும் உணர்ச்சிகளை சோதிக்கும் களமாக உள்ளது.
இங்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்போது நடந்த சம்பவம் மிகவும் மோசமானது. கேமர் ரோச்சின் வாக்குவாதம் தேவையற்றது.
அம்பயர்கள் எச்சரிக்கை செய்த பின், பிரச்னையை தவிர்த்திருக்கலாம். ஆனால், தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட இவரது நடத்தையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு ஜெப் குரோவ் கூறினார்.
0 comments