படப்பிடிப்பில்தான் படபடப்பு. நேரில் அத்தனை அமைதி. அடர்த்தியான குளிர் அறையில் 'எந்திரன்'பற்றிப் பேச ஆரம்பித்தார் ஷங்கர்.
"எந்திரன் 3D படமா?"
"அப்படியா பேசிக்கிறாங்க... குட்!
'டெர்மினேட்டர்', 'அவதார்' படங்களில் வேலை பார்த்தவர்கள் 'எந்திரன்' படத்துக்கு வேலை பார்த்திருக்காங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். இவ்வளவு நாளாகுதேன்னு சில பேர் கேட்கலாம். அவ்வளவு காரணங்கள் இருக்கு. நிறைய மெனக்கெடல் இருக்கு. ஒரு ரோபோ திடீர்னு மனிதனாக உருமாறி வெளியே மனிதக் கூட்டத்தில் திரிகிற விஷயம். ஏகப்பட்ட டெக் னாலஜி கலந்திருக்கு. இந்த அளவுக்குத்தான் ஒரு படம் இருக்கும்னு நினைச்சு வந்தால், அதுக்குப் பல படிகள் மேலே போயிருக்கோம். இதுவரைக்கும் நீங்க பார்க்காத புதுசு. கதையைப்பத்தி டீடெயிலாப் பேசலாம்தான். ஆனா, எங்க எல்லோருக்குமே, நான் படத்தின் டைரக்டராகவே இருந்தாலும்... இவ்வளவுதான் அனுமதி!"
"எப்படி இருக்கார் ரஜினி?"
"ரஜினி ரொம்ப அபூர்வம். புகழ், பணம், அந்தஸ்து அதெல்லாம் இல்லை விஷயம். எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துட்டே வர்றேன். அதுதான் நான் தேடுறதும்! நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கிறதுதான் பெரிய சவால். ரஜினி அந்தச் சவாலில் ஜெயிச்சவர். அவர்கிட்டே மாறாத விஷயம், நடிப்பு மேல் இருக்கிற துடிப்பு. கமல், விக்ரம்தான் இப்படி கெட்டப் மாற்றம்னு முன்னணியில் நிற்பாங்க. அது அவங்களுக்குக் கைவந்தது. இதில் ரஜினியும் அப்படி மாறிட்டார். நாலு மணி நேரமா, ஆறு மணி நேரமா அசையாமல் உட்கார்ந்து மேக்கப் போட்டாலும் செய்றார். டப்பிங் பேசிட்டுக் கிளம்பினதும் போன்ல, 'ஷங்கர்... அருமை அருமை'ன்னு சொல்வார். மாலையில் இன்னொரு போனில் 'மணிமணியா இருக்கு'ன்னு ஆசையாச் சொல்வார். அவரை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவரேதான் மாஸ்... அவரேதான் பாஸ்!"
"ஐஸ்வர்யா ராயை 'ஜீன்ஸ்'க்குப் பிறகு எப்படிப் பார்க்கிறீங்க?"
"இன்டெலிஜென்ட் பொண்ணு. 'எந்திரன்' தமிழ்ப் படம்தான். ஆனால், எனக்கு இன்டர்நேஷனல் அளவுக்கு ஒரு முகம் தேவைப்பட்டது. அது ஐஸ்வர்யா ராயைத் தவிர யாராக இருக்க முடியும்? ரஜினியின் ஸ்டைலும், ராயின் அழகும் இந்தப் படத்துக்குப் பெரிய அட்ராக்ஷன்!"
"நீங்களும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால், சந்தேகமே இல்லாமல் மியூஸிக்கல் ட்ரீட்தான். எந்திரனில் ரஹ்மானின் சாதனைகள் என்ன?"
"ஆஸ்கரைவிட ஆச்சர்யமான அம்சம், அதை இத்தனை நிதானமாகவும் பக்குவமாகவும் அவர் ஏற்றுக்கொண்ட விதம்தான். 'எந்திரன்'ல ஆறு பாடல்கள். மெலடி, வெஸ்டர்ன், ஃபேன்டஸி என எல்லா ரகங்களிலும் இருக்கும். ரஹ்மான் தன் இசைப் பயணத்தில் உச்சத்தில் இருக்கிற நேரம். பாடல்களும் அப்படி இருப்பதுதான் நியாயம். இதில் அந்த மேஜிக் நடந்திருக்கு!"
"இந்த 'எந்திரன்' கமல், ஷாரூக்கான்னு பெரிய ஸ்டார்கள் நடிக்கத் தீர்மானித்திருந்த படம்..."
"கமல் 2000-ல் இந்தப் படத்தில் நடிக்கிற மாதிரி இருந்தது. அவருக்கு ஏத்த மாதிரி கதையில் அவசியமான எல்லா விஷயங்களும் செய்தும், அது நடைமுறைக்கு வரலை. அடுத்து, ஷாரூக். அதுவும் ஏனோ டேக் ஆஃப் ஆகலை. ஆனால், எல்லாம் நல்லதுக்குத்தான். 'எந்திரன்' ரொம்ப நல்லா வரணும்னு என்னைவிட அக்கறைப்படுபவர் ஒருத்தர் இருக்கார். அவர்தான் ரஜினி!"
"ஏன் இன்னும் விஜய், சூர்யான்னு ரெண்டு பேரும் உங்க கண்ணிலேயே படலை?"
"நான் கதையை வெச்சுக்கிட்டு ஹீரோவைத் தேடுகிற ஆளு. எடுக்கப்போற கதைக்கு அவங்க ரெண்டு பேரும் பொருத்தம்னா, அவங்ககிட்ட கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. நிச்சயம் அவங்க ரெண்டு பேரும் என் படங்களில் நடிக்கிற காலங்கள் இருக்கு!"
"ஜாலி கமர்ஷியலா 'பையா'வும் நல்லாப் போகுது. அவ்வளவு கனமா 'அங்காடித் தெரு'வும் மனசை இழுக்குது. இந்த ரசிகர்களை எப்படி எடைபோடுவீங்க?"
"தமிழ் சினிமா இருக்கிற நிலைக்கு யாரோ ஒண்ணு ரெண்டு ஹீரோக்கள் படம் மட்டுமே ஓடினா, அது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. கமர்ஷியல், பரிசோதனை முயற்சிகள்னு எல்லாப் பக்கமும் தமிழ் சினிமா செழிக்கட்டும். ரசிகர்களுக்கு நிச்சயம் புதுசாத் தர கடமைப்பட்டு இருக்கோம்!"
"மணிரத்னத்தை எடுத்துக்கிட்டா, அரசியலையும் சமூகத்தையும் அதிகம் கதைக் கருக்களா எடுத்துக்கிட்டார். உங்களுக்கு ஏன் ஊழல் என்ற விஷயம் மட்டுமே முன்னாடி வந்து நிக்குது?"
"என் படங்களில் ஜனங்கள் பாதிக்கப்படுகிற எல்லாத்தையும் பேசியிருக்கேன். ஊழல், லஞ்சம்பற்றி மட்டும்தான் சினிமா செய்திருக்கேன்னு சொல்றது என்னைச் சின்னதாக ஆக்கிக் காட்டுகிற வேலை. 'அந்நியன்'ல அலட்சியம்பற்றிச் சொல்லி இருக்கேன். நீங்க சின்ன விஷயம்னு நினைக்கிறது எல்லாம் பெரிய விஷயமாகி எங்கே போய் நிக்கும்னு சொல்லி இருக்கேன். என் சினிமாவை விமர்சிக்கலாம். என் அக்கறையை, மக்களின் மீதான பார்வையைச் சந்தேகப்படவே கூடாது!" - மெலிதாகச் சிரிக்கிறார் ஷங்கர்.


0 comments